திங்கள், 27 ஜனவரி, 2014

Thanks to Jeyamohan and காந்திஜியின் கடைசி 200 நாட்கள். வி.ராமமூர்த்தி.

ஆகஸ்ட் 13 அன்று காந்தி கல்கத்தாவில் இஸ்லாமிய தலைவர் சுரவர்த்தியுடன் இஸ்லாமியக்குடியிருப்பு ஒன்றில் தங்கினார். அப்பட்டமான வகுப்புவாதியும் சுயநல அரசியல்வாதியுமான ஷஹீத் சுரவர்த்தியின் தலைமையில் முஸ்லீம்கள் இந்துக்களுக்கு எதிராக கொலைவெறியாட்டம் ஆடியிருந்தார்கள். ஆனால் பின்னர் கிராமப்புறத்தில் இருந்து இந்து இளைஞர்கள் திரண்டு திருப்பியடிக்க ஆரம்பித்தபோது அவர்கள் நடுவே தன் மக்களுடன் சுரவர்த்தி மாட்டிக்கொண்டார். தங்களை காக்கும்படி காந்தியிடம் அவர் சரண்புகுந்தார். முஸ்லீம்களை இந்து வெறியர்களிடம் இருந்து காக்க காந்தி சுரவர்த்தியுடன் அங்கே வந்தார், அவரும் சுரவர்த்தியும் சேர்ந்து ஹைதாரி மாளிகை என்று சொல்லபப்ட்ட பாழைந்த நாற்றமடிக்கும் கட்டிடத்தில் தங்குவதாக ஏற்பாடாகியது.

சுரவர்த்தியை காரில் இருந்து இழுத்துப்போட்டு கொல்லவந்த இந்துவெறிக்கும்பலிடம் காந்தி கைகூப்பி மன்றாடி அவருடைய உயிரை காப்பாற்றினார். அவர்களிடம் தன் பேச்சைக் கேட்குமாறு அவர் மன்றாடினார். மெலிந்த தோள்களுடன் நின்ற தந்தைவடிவம் அவர்களை அமைதியடையச்செய்தது. ஆனால் அவர்கள் அவரை வசைபாடினார்கள். இந்துக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்படும்போது அவர் எங்கே சென்றிருந்தார் என்று கேட்டார்கள். அப்போதுகூட இந்துக்கள் கொல்லப்படுகிறார்களே அதை தடுக்க அவரால் ஆகுமா என்றார்கள். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் அவர்களிடம் அகிம்சையை வலியுறுத்தினார். பரஸ்பரப்புரிதலை நோக்கி பொறுமையுடன் முன்னகர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

‘நான் என்னை உங்கள் பாதுகாப்பில் விடப்போகிறேன்.அவ்வளவுதான். நீங்கள் எனக்கு எதிராக திரும்பலாம். என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். நான் என் வாழ்க்கைப்பயணத்தின் இறுதிக்கட்டத்தை அனேகமாக எட்டிவிட்டேன். நான் இன்னும் நீண்டதூரம் செல்லவேண்டியதில்லை. ஆனால் பைத்தியக்காரத்தனத்துக்கு நீங்கள் இடம்கொடுக்கப்போகிறீர்கள் என்றால் நான் அதை உயிரோடு பார்க்கும் சாட்சியாக இங்கே இருக்கப்போவதில்லை” அவர்கள் அமைதியடையவில்லை. அவர்கள் ஆழமாக புண்பட்டிருந்தார்கள். கொதித்துக்கொண்டிருந்தார்கள், ஆனால் அவரை மீறவும் அவர்களால் முடியவில்லை.

மறுநாள் இந்தியா சுதந்திரமடைவதற்கு முந்தைய காலையில் மீண்டும் அந்த வெறிகொண்ட இளைஞர்கள் அவரிடம் வந்தார்கள். அவரை வசைபாடினார்கள். அவரை சாபமிட்டு அழுதார்கள். ஆனால் அவர் மீண்டும் அவர்களிடம் பொறுமையையும் அகிம்சையையும் சகமனிதர்கள் மீதான நம்பிக்கையையும் வலியுறுத்தினார். நவீன யுகத்திலும் அதிசயங்கள் நிகழக்கூடும் என்பது மெல்ல மெல்ல நிரூபணமாகியது. அந்த இளைஞர்கள் அவர் முன் மெல்ல அமைதியடைந்தனர். அவரது சொற்களுக்குப் பனிந்து வன்முறையைக் கைவிட்டனர். கல்கத்தா பரிபுரணமாக அமைதிக்குத் திரும்பியது.

அன்று மாலை நடந்த பிரார்த்தனைக்கூட்டத்தில் காந்தி பேசும்போது இந்தியா பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கக்கூடிய பொறுப்பு உண்டு என்றார். சுதந்திரம் கிடைக்கும் ஆகஸ்ட் 15 நாள்முழுக்க உண்ணாநோன்பிருந்து பிரார்த்தனை செய்து இந்தியாவும் பாகிஸ்தானும் நலம்பெறுவதற்காக பிரார்த்தனை செய்வோம் என்றார். அந்த கூட்டத்தில் மக்கள்நடுவே தோன்றிய சுரவர்த்தி அவர் தலைமைதாங்கி இந்துக்கள் மீது நடத்திய கொலைவெறியாட்டத்துக்கு முழுப்பொறுப்பு ஏற்பதாக அறிவித்து தலைகுனிந்து இந்துக்களிடம் மன்னிப்பு கோரினார்.

ஆகஸ்ட் 15 அன்று தேசமே மகாத்மா காந்திக்கு ஜே என்று கூவிக்கொண்டிருந்தது. டெல்லியில் காந்தியின் படத்தை வைத்து நேருவும் படேலும் புதிய இந்திய அரசை அமைத்தனர். ஆனால் காந்தி கல்கத்தாவில் கலவரத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பெலியகட்டா பகுதியில் இருந்தார். அன்று அவர் உணவுண்ணவில்லை. அவரது அமைதிச்செய்தி அங்கே பரவி தெருக்கள் தோறும் இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து மதநல்லிணக்க ஊர்வலங்களை நடத்தினார்கள். மாலை ஆக ஆக மகிழ்ச்சியும் களியாட்டம் கலந்த மனநிலை உருவாக ஆரம்பித்தது.

அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்திருந்த காந்தி அன்று தூஙகச்செல்ல பதினொரு மணி ஆகிவிட்டிருந்தது. மூன்றுமணிநேரம் தூங்கிவிட்டு எழுந்த அவர் கைராட்டையில் நூல்நூற்க ஆரம்பித்தார். அதன் பின் காலைநடை சென்றார். அந்த பாழடைந்த மாளிகை காந்தியாலும் ஊழியர்களாலும் முழுமையாக தூய்மைசெய்யப்பட்டு ஆசிரமம் ஆக மாற்றப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக